Monday 27 February 2017

02. அறுசமயக் கடவுளர் துதி (வெண்பா)

1. காணபத்யம்:
விநாயகர்:

வாரண மாமுகனை வல்வினை தீர்ப்பவனைச்
சாரண கின்னரர்கள் சாற்றுநல் வேதியனைக்
காரண மானவனைக் காக்குந்நற் காவலனைப்
பூரண  மானவனைப் போற்று

சாரணர், கின்னரர் - 18 வகை சிவ  கணங்களைச் சேர்ந்தவர்கள்.
சாற்றும் - சாற்றுதல் - புகழ்ந்துப் பேசுதல்
காரண மானவனை - காரணம் ஆனவனை. அனைத்திற்கும் காரணம் விநாயகனே.

2. கௌமாரம்:
முருகன்:

கந்தனை வள்ளிமகிழ் காந்தனை யாவரும்
வந்தனை செய்திடும்  வையகத்து  வேந்தனைச்
சிந்தனை செய்யவே தீவினை தீண்டாமல்
வந்தவன் காத்திடு வான்

3. சைவம்:
சிவன்:

ஆழிசூழ் வையத்தை ஆண்டருளும் ஆதியனே!
காழிவாழ் சம்பந்தன் கைதொழும் வேதியனே!
வீழிமிழ லைமேவும் வித்தக வேந்தே!நீ
வாழியென் பார்க்கருள வா

4. சாக்தம்:
அம்பாள்:

தாயே இபமுகன் தன்னை அளித்தவளே
நீயே துணையென நித்தமும் போற்றிடும்
சேயேன் சிறப்பொடு வாழ அருள்புரி
வாயே உமையே மகிழ்ந்து

இபமுகன் - யானை முகன்

5. வைணவம்:
விஷ்ணு (சக்கரத்தாழ்வார்):

உக்கிர மாவுருவே ஓங்கிவளர் சோதியே
வக்கிரந் தீர்ப்பவனே மாதவன் கைதவழ்
சக்கர நாயகனே தத்துவப் பேருணர்வை
இக்கணமே ஈவாய் எமக்கு

திருமால் கையில் தாங்கும் சக்கரம், திருமாலே என்று கருதி பாடியது. சக்கரத்தை பாடினால் சக்கரபாணியை பாடுவதாகும்.

* உக்கிர மா உரு - விஷ்ணுவின் உக்கிரமான ஸ்வரூபம் சக்ராயுதம்.
* ஓங்கிவளர் சோதி - சக்ராயுதம், கனல் ரூபம்.  தீமைகளை எரித்து அழிக்கும் வல்லமை பெற்றது. சுடர் ஆழி என்று,  பெரியாழ்வார்  திருப்பல்லாண்டில் புகழ்கிறார்.
* ஸ்ரீ சுதர்சன காயத்ரி மந்திரம், ஜ்வாலா சக்ராய என்று கூறுகிறது. ஜ்வாலை - நெருப்பு.
* வக்கிரம் - துன்பம்
* தத்துவப் பேருணர்வு - தத்துவ ஞானம். ஸகல தத்வ ப்ரதிஷ்டித என்று சுதர்சன அஷ்டகத்தில் வரும்.

6. சௌரம்:
சூரியன்:

ஞாயிறு நாளனை ஞாலத்தின் பேரொளியை
ஆயிரங் கைகொண்(டு) அருள்செயும் ஆதவனைக்
காரிய காரணனைக் காரிருள் போக்கிடும்
சூரியனை நாளும் துதி

* ஞாலம் - உலகம்.
* பேரொளி - சூரியனின் ஒளி, உலகிற்கு இன்றியமையாதது.
* ஆயிரம் கை - ஆயிரம் கிரணங்கள்.
* காரிய காரணன் - செய்யும் செயல்கள் அனைத்திற்கும் காரணமானவன்.

No comments:

Post a Comment