Friday 9 June 2017

11. பொது - திருக்குறுந்தொகை (பதிகம் 6)

வணக்கம்.

அடுத்த முயற்சி - குறிப்பாக இன்ன தலம் என்றில்லாமல், பொதுவாக, சிவபெருமான் மீது புனைந்த பாடல். அப்பர் பெருமானின் வட்டனை மதிசூடியை... என்ற தேவார அமைப்பில்.

கட்டளைக் கலிவிருத்தம் திருக்குறுந்தொகை அமைப்பில்.

இலக்கண குறிப்பை இப்பதிவின் இறுதியில் காண்க.

நாத னைந்நட மாடிடுந் தேவனை
வேத னைவ்விட முண்டவென் ஐயனைக்
கீத னைக்கெடி லத்துறை வேந்தனை
ஆத னையடி யேன்மறந் துய்வனோ. 1

ஆதன் - பெரியோன்/ஆன்மா
கெடிலத்துறை - கெடிலம் - திருவதிகை வீரட்டானத்தில் ஓடும் ஆறு.

தூய னைத்துயர் நீக்கிடும் ஈசனை
மாய னைம்மறைக் காட்டிலு றைவனை
நேய னைந்நிறம் ஓரைந் துடையனை
ஆய னையடி யேன்மறந் துய்வனோ. 2

ஆயன் - பொன் மயமானவர்

முத்த னைம்முது குன்றமர் கோவினைப்
பித்த னைப்பிறை சூடிய பேரெழிற்
சித்த னைச்சிரிப் பாலெயில் மூன்றெரி
அத்த னையடி யேன்மறந் துய்வனோ. 3

முதுகுன்று - விருத்தாச்சலம் (திருமுதுகுன்றம்)

கமல னுங்கரி யானும் அறிந்திடா
நிமல னைந்நீள் தழலாய் எழுந்தனை
விமல னைவ்விடை ஏறிடும் பாகனை
அமல னையடி யேன்மறந் துய்வனோ. 4

கமலன்-பிரமன்
கரியான்-விஷ்ணு

விருத்த னைவெண் குளிர்மதி சூடியை
நிருத்த னைநெடு நாகம் அணிந்தனைக்
கருத்த னைக்கார் மிடறுடை ஈசனை
அருத்த னையடி யேன்மறந் துய்வனோ. 5

மெய்ய னைம்மென் மலரணி புன்சடைச்
செய்ய னைச்சேர்ந் தறியாக் கரத்தனைக்
கையி னில்கன லேந்திநின் றாடிடும்
ஐய னையடி யேன்மறந் துய்வனோ. 6

சேர்ந்தறியாக் கரத்தன் - கூப்பிய கைகள் இல்லாதவன். நமக்கு ஏதாவது வேண்டுமென்றாலோ அல்லது நம்மைவிட பெரியவரைப் பார்த்தாலோ நாம் கைகளைக் கூப்பி வணங்குவோம். ஆனால் இறைவனிடம் எல்லாம் இருக்கிறது. அவருக்கு வேண்டுவது என்று எதுவும் இல்லை. மேலும் இறைவனே பெரியவன். அவரைவிடப் பெரியவன் வேறு யாரும் இல்லை. ஆதலால் அவர் கைகளைக் கூப்ப வேண்டியது இல்லை. அவர் கைகள் சேர்ந்து இருக்காது. சேர்ந்தறியாக் கையானை என்று மாணிக்கவாசக பெருமான், திரு அம்மானையில் பாடியுள்ளார்.

விண்ண வர்விரும் பித்தொழும் வேந்தனை
எண்ணு தற்கினி தான இறைவனைப்
பெண்ணு றைபெரு மானைப் பெருந்துறை
அண்ண லையடி யேன்மறந் துய்வனோ. 7

பெருந்துறை - திருப்பேணுபெருந்துறை (திருப்பந்துறை) என்று கும்பகோணம் - பூந்தோட்டம் பாதையில், நாச்சியார்க்கோவிலுக்கு அருகில் உள்ள பாடல் பெற்ற தலம். அல்லது திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில் (புதுக்கோட்டைக்கு அருகில்) என்றும் கொள்ளலாம்.

பூத னைப்புவி காத்திடும் பேரெழிற்
பாத னைப்பை அரவம் அணிந்தனைச்
சீத னைச்செஞ் சடைமேல் முடிந்தனைத்
தாத னைத்தமி யேன்மறந் துய்வனோ. 8

பூதன் - தூயன்.
சீதன் - சந்திரன்.
தாதன் - தந்தை.

கோதி லாக்கோ கழிதனில் வந்தனை
நீதி யைநிலை பெற்றிடச் செய்தனைச்
சோதி யைச்சுட ராயொளிர்ந் தோங்கிய
ஆதி யையடி யேன்மறந் துய்வனோ. 9

கோகழி - திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில்.

உமையி னையொரு பாகம் உடையனை
இமைய வர்பணிந் தேத்தும் எழிலனைச்
சமண ருந்தர மில்லோ ருமறியா
அமுதி னையடி யேன்மறந் துய்வனோ. 10

இமையவர் - தேவர்கள்
சமண ருந்தர மில்லோ ருமறியா - சமணரும் தரம் இல்லோரும் அறியா.
தரம் இல்லோர் - நாத்திகர்.

பி.கு:
1. இப்பதிகத்தில் பத்துப் பாடல்கள்.
2. பாடலுக்கு நான்கு அடிகள்.
3. ஒவ்வோர் அடியிலும்:
1. முதல் சீர் 'மா'
2. இரண்டாம் சீர் நேர் அசையில் தொடங்கும்
3. 2-3-4 சீர்களுக்கு இடையே வெண்டளை பயிலும்
4. அடி நேர் அசையில் தொடங்கினால், அடியில் 11 எழுத்துக்கள். நிரை அசையில் தொடங்கினால், 12 எழுத்துக்கள்.

ஐயா திரு பசுபதி அவர்களின் "கவிதை இயற்றிக் கலக்கு" புத்தகத்தில் அவர் கூறி இருந்ததை இங்கு பகிர்கிறேன். "கட்டளைக் கலிவிருத்தத்தில், 2-3-4 சீர்களுக்கு இடையே வெண்டளை பயின்று வருமாறு அமைத்தால், இந்த எழுத்துக் கணக்குகள் தானே சரியாகிவிடும்".

4. சந்தத்திற்காக சில வரிகளில் ஒரு ஒற்று (எ.டு. ந்,வ்,ம்) வரின் சிறக்கும்
5. முதல் சீரிலும், மூன்றாம் சீரிலும் மோனை வராது, முதல் சீர் முதல் அசை, இரண்டாம் சீர் இரண்டாம் அசை ஆகியவற்றில் மோனை பயின்று (கள்ள மோனை) அமைந்துள்ளது.

No comments:

Post a Comment