Wednesday 7 March 2018

32. சிவன் சிலேடைகள்

1. அன்பே சிவன்

எங்கும் நிறைந்திருக்கும் ஏசுபவர்க்(கு) எட்டாது
பங்கம் அறியாது பற்றிடுவார்க்(கு) என்றும்பேர்
இன்பம் அளிக்கும் இதயத்துள் தங்கிடும்
அன்பே சிவனென்(று) அறி

2. தேங்காய் - சிவன்

முக்கண் பதிந்த முகமிருக்கும் ஓடேந்தும்
செக்கச் சிவந்தநல் தேசுலவும் நீராரும்
ஓங்கி வளரும் ஒளிமதிக் கீற்றணியும்
தேங்காய் சிவனெனச் செப்பு

தேங்காய்:
  • முகப்பில் மூன்று புள்ளிகள் இருக்கும்
  • மேலுள்ள ஓடு காயைத் தாங்கும்
  • செக்கச் சிவந்த (shades of brown) ஓடாக இருக்கும்
  • இளநீர் நிறைந்திருக்கும்
  • உயரத்தில் (உயர்ந்த மரத்தில்) வளரும்
  • உடைத்து நறுக்கினால், அழகிய நிலாவைப் போன்ற வெள்ளை நிறத் துண்டம் இருக்கும்


சிவன்:
  • முகத்தில் மூன்று கண்கள் உடையவர்
  • பிரம்ம கபாலத்தைக் கையில் கொண்டவர்
  • சிவந்த ஒளி வீசும் மேனியர்
  • கங்கை நீர் பாயும் சடையர்
  • உயர்ந்து வளரும் சோதி
  • ஒளிவீசும் நிலாத்துண்டம் அணிபவர்


3. மயில் - சிவன்

நீல மணிகண்டன் நீண்முடிக் கொண்டையன்
கோலமாய்க் காட்டினில் கூத்தாடும் சீலன்
அயிலுடைப் பேரரசன் அஞ்சிறகு பூணும்
மயிலைச் சிவனென வாழ்த்து

சிவன்:
  • விடமுண்டதால் கழுத்தில் மணி போல் நீல நிறத்தில் கறை இருக்கும்.
  • நீண்ட சடைமுடிக் கொண்டை இருக்கும்
  • அழகாக காட்டில் நடனமாடும் வித்தகன்
  • அயில் = சூலம் (கூறிய வேல்). சூலத்தைக் கையில் ஏந்தும் பெரியவன்.
  • அழகிய கொக்கின் இறகை அணிவார்

மயில்:
  • நீல நிறத்தில் கழுத்து இருக்கும் (மயில் கழுத்து colour) என்று சொல்வது உண்டு.
  • தலையில் கொண்டை நீட்டிக்கொண்டிருக்கும்.
  • அழகாய் காட்டில் நடமிடும் திறமை உடையது.
  • அயில் - அழகு. அழகுடைய பெரிய பறவை. (பறவைகளுள் அழகில் இதுவே அரசன்)
  • அழகிய தோகை (இறகுகள்) இருக்கும்.

4. புத்தகமும் சிவனும்

ஞானியர் போற்றிடும் ஞானத்தை நல்கிடும்
தானாய்த் திரிவோர்க்குத் தக்க துணையாகும்
சீலர் மனத்துள் திகழ்ந்திடும் நல்லதொரு
நூலைச் சிவனென நோக்கு

  • அறிவுள்ளோர் போற்றும் பொருள்
  • அறிவைத் தரும் பொருள்
  • தானாய்த் திரிவோர்க்கு - தனியாக இருப்பவர்களுக்கு மிக நல்ல துணையாய் இருக்கும் பொருள்
  • சீலர் - உயர்ந்த குணம் படைத்தவர் மனத்தினுள் எப்போதும் திகழும் பொருள்
  • நூல் - புத்தகம்
  • நல்ல புத்தகமும் எம் ஐயன் சிவபெருமானும் ஒன்றே என்று காண்க.

5. சிவன் - விளக்கு

எரியினை ஏந்திடும் எங்கும் பரவும்
இருளினை நீக்கும் இழையை அணியும்
அருமலர் ஏற்கும் அகத்தில் திகழும்
அரனே அணையா விளக்கு.
  • எரி - நெருப்பு / சுடர்
  • இழை - முப்புரி நூல் / திரி
  • விளக்கிற்கும் பூவைத் தூவி பூஜை செய்வர்
  • அகம் - மனம் / இல்லம்
6. சின்டெக்ஸ் டேங்க் - சிவன் சமீபத்தில், சென்னையில் பறக்கும் இரயிலில் சென்ற போது, குடியிருப்பு வளாகங்களில், மொட்டை மாடியில், தண்ணீருக்காக வைக்கப்பட்டிருந்த, பல "Sintex" தொட்டிகள் சிவலிங்கத் திருமேனிகள் போல் தோன்றியன. அதனை வைத்து அடியேனின் முயற்சி. நீரினைத் தாங்கிநிற்கும் நேரத்தில் தந்தருளும் பாரினில் உள்ளோர்க்குப் பாங்குடனே - சீருடைய மன்றத்தில் மையமாய் மாண்போ டிலங்கிடும் சின்டெக்ஸ்நீர்த் தொட்டி சிவன் சிவன்: *முடியில் கங்கையை வைத்திருப்பார் *பாரில் உள்ளோர் வேண்டிட, தகுந்த நேரத்தில் தகுந்தனவற்றைத் தருவார். *சிறப்புடைய சபையில் நடுநாயகமாக பெருமையோடு விளங்குவார் சின்டெக்ஸ்டேங்க்: *தன்னுள்ளே தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கும் *மக்களுக்கு வேண்டிய போது, தேக்கிய தண்ணீரைத் தரும் *மொட்டை மாடியில் (திறந்த வெளியில்) முக்கிய இடம் பிடித்திருக்கும்.


அன்புடன்,
சரண்யா

No comments:

Post a Comment