Wednesday 7 March 2018

31. பொது சிலேடைகள்

1. காசும் உலகும்

சுற்றிச் சுழலும் சுகத்தை அளித்திடும்
பற்றைக் கொடுத்துப் பரமன் நினைவகற்றும்
மாசு கலந்த மனத்தினைத் தந்திடுமிக்
காசினி ஆகுங்காண் காசு

காசினி - உலகம்.

காசு:
  • பலரிடமும் சுற்றி, நம்மிடம் வரும்.
  • வேண்டியதைப் பெற்றுக் கொடுத்து சுகத்தை அளிக்கும்.
  • பல பொருட்களின் மீது பற்றைத் தந்து, இறைவன் பற்றிய நினைவை நம்மிடமிருந்து விலக்கிவிடும்.
  • பேராசை, கஞ்சத் தனம் போன்ற தாழ்ந்த குணம் நிறைந்த மனத்தினைக் கொடுக்கும்.


உலகம்:
  • சூரியனைச் சுற்றும், தன்னைத் தானே சுழற்றிக் கொள்ளும்.
  • வெளிப்படையாக பார்க்க இன்பம் தருவதாய் இருக்கும், இங்கு வீடு, நிலம் வாங்க வேண்டும் என்ற பற்றைக் கொடுக்கும்.
  • இதுவே நிரந்தரம் என்ற மாயையைத் தந்து இறைவன் பற்றிய நினைவை மறைத்து விடும்.
  • பல குற்றங்கள் செய்ய தூண்டும்.

2. செல்பேசியும் செபமாலையும்

அல்லும் பகலும் அமர்ந்திடும் கையினில்;
தொல்லை தருமே தொலைத்தோர் மனதிற்குச்;
செல்லும் இடமெங்கும் சேர்ந்துடன் வந்திடும்
செல்லாகும் சீர்செபமா லை

3. வேப்பமரமும் தாயும்

இலையை விரிக்கும் இதத்தைக் கொடுக்கும்
நிலையைக் குலைத்திடு நோயினை நீக்கிடும்
காப்பினை இட்டுயர் காவல் அளித்திடும்
வேப்பமரம் தாயென மெச்சு

தாய்:
  • வாழை இலையை விரித்து உணவு பரிமாறுவாள்
  • அன்பு மொழியால் இதத்தை மட்டுமே தருவாள்
  • நம்மை வாட்டிடும் துன்பத்தைத் தன் அரவணைப்பால் துடைத்திடுவாள்
  • காப்பு - திருநீறு அல்லது இரட்சைக் கயிற்றைக் கைகளில் கட்டி, காவல் அளிக்க வைப்பாள்

வேப்பமரம்:
  • இலைகளை விரித்து நல்ல நிழலைக் கொடுத்து நமக்கு இதமளிக்கும்.
  • பல நோய்களுக்கு மருந்து வேப்பங்கொழுந்து/காய்
  • ஊர் எல்லைகளில் காவல் புரியும் தெய்வமாய்க் கருதப்படும். மற்றொன்று, வேப்பிலைக் காம்பினைக் காப்பாக சிறுவர்களுக்குக் கட்டுவார்கள். அம்மை நோயின் போது படுக்கைக்கு அருகிலும், வீட்டு வாசலிலும் வேப்பிலையை வைப்பார்கள்.


4. நிலவும் உயிரும்

சமீபத்தில் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம உபன்யாசம் கேட்கும் போது, அம்பாள் எவ்வித மாறுதலும் இல்லாதவள் என்றும் ஜீவராசிகளுக்கே ஆறு விதமான மாறுதல்கள் (பிறத்தல், இருத்தல், வளர்தல், மாறுபடுதல், தேய்தல், இறத்தல்) உண்டு என்றும் கேட்டேன். எனக்கு நிலவின் நினைவு வந்தது (பிறந்து-வளர்ந்து-தேய்ந்து-மறைந்து மீண்டும் பிறந்து...). அதனால் நிலவையும் உயிரினத்தையும் ஒப்பிட்டு ஒரு சிலேடை முயன்றேன்.

குறிப்பு - சந்திரனின் கலைகள் - இரண்டு வகை.

1. அழியாது எப்போதுமே இருக்கக் கூடிய 16 கலைகள் (15 திதி நித்யா தேவிகள் + ஸதா என்னும் கண்ணுக்குப் புலப்படாத கலை (அம்பாளே தான்)).

2. வளர்ந்து - தேய்ந்து சுழலக்கூடிய 15+15 = 30 கலைகள்.

இப்பாடலில் அடியேன் எடுத்துக் கொண்டுள்ளது இந்த இரண்டாம் வகையான கலைகளே.

நன்றி திரு பாலு மாமா (Sahasranaman Balasubramanian)

இதில் இறப்பிற்குப் பின் அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபிறப்பு உண்டு என்பதால் அதனையும் இறுதியில் சேர்த்துள்ளேன்.

பாடல்:

புதிதாய்ப் பிறக்கும் பொலிவோ டிலகும்
அதிவேக மாய்வளரும் அன்றாடம் மாறும்
குலையும் இறக்கும் குலாவிப் பிறக்கும்
நிலவும் உயிரினமும் நேர்

  • இலகுதல் - விளங்குதல்
  • குலைதல் - தேய்தல் (deterioration)
  • குலாவுதல் - வளைதல் (மீண்டும் / again)
  • இறந்ததும் சுற்றித் திரிந்து மீண்டும் பிறவி எடுத்தல்


அன்புடன்,
சரண்யா

No comments:

Post a Comment