Monday 21 May 2018

41. அம்பாள் - சத்தி அடியே சரண்

1.

உலகைப் படைத்திடும் உத்தமி வாமி
அலகிலாப் பீடுடை அம்மை - நிலையான
பத்தியைத் தந்திடும் பார்வதி ஆதிபரா
சத்தி யடியே சரண்

ஸ்ரீ மாதா என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் தொடங்குகிறது.

2.

வையத்தைக் காக்கும் வயிரவி சாமுண்டி
பையராப் பூணும் பரமனார் பாகத்தாள்
எத்திக்கும் போற்றும் எழிலுடையாள் ஆதிபரா
சத்தி யடியே சரண்

ஸ்ரீ மஹாராக்ஞீ, ஸ்ரீ மத் சிம்ஹாசனேஸ்வரி என்று தேவியின் காத்தல் பற்றி சஹஸ்ரநாமம் கூறுகிறது. சிவ வாம பாக நிலையாம் என்று மீனாக்ஷி பஞ்சரத்னம் வர்ணிக்கின்றது.

3.

இருநாழி நெற்கொண்(டு) இருநிலத்தே முப்பத்(து)
இருவறம் செய்த இழையாள் - பெருமுலையாள்
முத்திதரும் வித்தகி மும்மலம் தீர்த்திடும்
சத்தி யடியே சரண்

சிவபெருமான் அளந்த இருநாழி நெல் கொண்டு, 32 அறங்களை அம்பாள் செய்தாள் என்று புராணம் கூறுகிறது. தர்மசம்வர்தனி என்ற நாமம் இதனைக் குறிக்கும்.

4.

அடியாரை அன்போ(டு) அரவணைக்கும் அன்னை
மிடிதீர் விமலை மிளிரும் மணிமுடியாள்
சத்தியம் ஆனவள் தாபங்கள் தீர்த்திடும்
சத்தி யடியே சரண்

5.

இமவான் மடந்தை இபமுகன் அன்னை
அமரர்கள் போற்றும் அரசி - அமுதினும்
தித்திக்கும் வாக்குடையாள் செய்யொளியாள் ஆதிபரா
சத்தி யடியே சரண்

"நிஜ சல்லாப மாதுர்ய விநிர் பர்த் சித கச்சபி" என்று லலிதா சஹஸ்ரநாமம் அழைக்கிறது. அதாவது, அம்பாளின் குரல், சரஸ்வதியின் வீணாகானத்தை விட இனியது என்று குறிப்பு. தேனார்மொழிவல்லி, மதுரபாஷிணி என்ற நாமங்கள் இதனைக் குறிக்கும்.

செய்யொளியாள் - சிவந்த வண்ணத்தாள் - சிந்தூராருண விக்ரஹாம் - லலிதா சஹஸ்ரநாம த்யான ஸ்லோகம்

6.

துட்டரை மாய்ப்பவள் தூயவள் அன்பர்தம்
கட்டத்தைத் தீர்ப்பவள் கற்பகம் - அட்டமா
சித்தியைத் தந்திடும் சின்மயி ஆதிபரா
சத்தி யடியே சரண்

7.

சிந்தைக் கவலைகள் தீர்க்குஞ்சிந் தாமணி
வந்திப் பவர்க்கருளும் வாராகி - எந்தாய்நற்
புத்தியை நல்கிடும் பூரணி ஆதிபரா
சத்தி யடியே சரண்

8.

இந்திரையும் வாணியும் ஏற்றமிகு சாமரங்கள்
வந்தித்து வீச மகிழ்பவள் - சிந்திக்கும்
பத்தர்க் கருளும் பராத்பரி ஆதிபரா
சத்தி யடியே சரண்

ஸ சாமர ரமா வாணி ஸவ்ய தக்ஷிண சேவிதா (சஹஸ்ரநாமம்)

9.

கந்தனைத் தந்தவள் கண்ணுதலான் பாகத்தாள்
விந்தைகள் செய்பவள் வேதங்கள் - வந்திக்கும்
வித்தகி பஞ்சினும் மெல்லடியாள் ஆதிபரா
சத்தி யடியே சரண்

10.

எல்லைகள் அற்றவள் இன்பங்கள் சேர்ப்பவள்
தொல்லைகள் தீர்ப்பவள் சோர்விலள் - நல்லோர்தம்
சித்தத்தின் உள்ளே திகழ்பவள் ஆதிபரா
சத்தி யடியே சரண்

No comments:

Post a Comment